உணவுக்குழாய் ரிஃப்ளஸ் நோய் யாருக்கு வரும்? தவிர்ப்பது எப்படி ? நிபுணர் தரும் A- Z முழுமையான கைடு..!

gastroesophageal reflux disease என்னும் இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் என்றால் என்ன?

இந்த GERD என்பது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோயை குறிக்கிறது. வயிற்றுக்கும் உணவுக்குழாய்க்கும் இடையில் உள்ள கீழ் உணவுக்குழாய் சுழற்சியின் தசைகள் பலவீனமடைவதால் ஏற்படும் ஒரு பாதிப்பு. சுருக்கமாக சொன்னால் வயிற்றில் இருக்கும் அமிலம், நாம் சாப்பிட்ட உணவு, டியோடினம் (DOO-ah-DEE-num) சிறுகுடலில் உள்ள முதல் பகுதி வயிற்றிலிருந்து மேல் ர்ஃபளக்ஸ் ஆகி உணவுக்குழாய் வருவதை குறிக்கும் நிலையே ஜிஇஆர்டி என்று அழைக்கப்படுகிறது.

​இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் வரும் போது உடலில் உண்டாகும் மாற்றங்கள்​

உணவுக்குழாய்க்கும் இரைப்பைக்கும் நடுவில் ஒரு வால்வு உண்டு. நாம் சாப்பிடும் போது ஒரு வழிப்பாதையாக உணவை வயிற்றுக்குள் தள்ளி மூடிவிடும். இது இயற்கையாகவே உடலில் நடக்கும். ஆனால் GERD நிலையில் இந்த வால்வு இந்த செயலை செய்யாமல் தளர்ந்து பலவீனமாக இருக்கும். இதனால் சாப்பாடு வயிற்றின் உள்ளே போனாலும் அவை எழும்பி மேலே வந்து இந்த உபாதையை ஏற்படுத்துகிறது.

​இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அறிகுறிகள் எப்படி இருக்கும்?​

இதன் பொதுவான அறிகுறிகள் என்றால் நெஞ்செரிச்சல் தான். இவை தவிர

ஏப்பம் வந்துகொண்டே இருப்பது
வாந்தி வருவது போன்ற உணர்வு
வாந்தி எடுப்பது
திடீரென்று தொண்டை மற்றும் நெஞ்சுவரை தண்ணீர் மேலே வருவது
சிலருக்கு தொண்டை வரை வந்து தொண்டை கட்டு இருக்கும்.
இன்னும் சிலருக்கு இருமல் இருக்கும்.
சிலருக்கு ஆஸ்துமா வரும்
வாய் துர்நாற்றம்
பற்களில் கறை படிவது
வாயில் சின்ன சின்ன புண் வருவது
நெஞ்சுவலியும் இருக்கும் இது மாரடைப்பாக சிலர் தவறாக நினைப்பதுண்டு

தீவிர நிலையில்

சாப்பிடும் உணவு நெஞ்சில் அடைப்பது போன்ற உணர்வை ஏற்படுத்தும். இதனால் தண்ணீர் குடித்து உணவை விழுங்குவார்கள். இன்னும் சிலருக்கு இது புற்றுநோய் வரை கூட உண்டு செய்யலாம்.

​இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் வருவதற்கு என்ன காரணம்?​

உணவுப்பழக்க வழக்கம் – முக்கிய காரணமாக சொல்லலாம். சரியாக சாப்பிடாமல் இருப்பது அல்லது அதிகமாக சாப்பிடுவது, அடுத்து சாப்பிட்டவுடன் தூங்க செல்வது.
உணவு முறை – அதிக காரம், அதிக மசாலா, அதிக எண்ணெய், ஜங்க் ஃபுட் அதிகம் சாப்பிடுவது, எண்ணெயில் பொரித்த அப்பளம், ஊறுகாய், பொடி போன்றவற்றை அதிகம் எடுப்பது.

​இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ச் சிறியவயதினரையும் பாதித்துள்ளதா?​

கண்டிப்பாக. இப்போது பள்ளி செல்லும் குழந்தைகளிடம் கூட இந்த GERD அதாவது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் பார்க்க முடிகிறது. காரணம் மன அழுத்தம், சரியான நேரத்தில் தூங்காதது. நேரத்துக்கு சாப்பிடாமல் இருப்பது, இரவில் நீண்ட நேரம் கண்விழிப்பது என குழந்தைகள் கூட சரியான வாழ்க்கை முறையை வாழ்வதில்லை. அதோடு உணவிலும் ஸ்நாக்ஸ், ஜங்க் ஃபுட் போன்றவை அதிகம் சாப்பிடுகிறார்கள். முன்பு போன்ற உணவு முறை பழக்க வழக்கங்கள் இப்போது இல்லை.

முந்தைய காலங்களில் வாழ்க்கை முறையில் தூக்க முறை என்பது ஆரோக்கியமானதாக இருந்தது. வழக்கமாக 8 -9 மணிக்குள் இரவில் தூங்க சென்று விடுவார்கள். இதனால் மாலை 6 அல்லது 7 மணிக்குள் சாப்பிட்டுவிடுவார்கள். இப்போது நள்ளிரவு 1 மணிக்கு கூட சாப்பிடுகிறார்கள். தூக்கமுறையே மாறிவிட்டது. இவை கூட இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் அதிகரிக்க காரணமாக சொல்லலாம்.

அதோடு பதின்ம வயதினர் உட்கார்ந்த வாழ்க்கை முறை பழக்கவழக்கங்களை கொண்டிருக்கிறார்கள். இது உடல் பருமனை உண்டு செய்துவிடுகிறது. இவையும் காரணமாக சொல்லலாம்.

டீன் ஏஜ் வயதினர் உடலை கட்டுக்கோப்பாக வைக்கிறேன் என்று உணவில் போதுமான அக்கறை செலுத்துவதில்லை. நேரம் தவறி சாப்பிடுவது, காலை உணவை தவிர்ப்பது, உடல் மெலிய பட்டினி கிடப்பது, வெளி இடங்களில் சாப்பிடுவது. ஜங்க் ஃபுட் எடுப்பது போன்ற மோசமான பழக்கவழக்கங்களும் கூட இதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.

​நெஞ்செரிச்சல் வந்த உடன் மருத்துவரை அணுக வேண்டுமா?​

நெஞ்செரிச்சல் அடிக்கடி வந்தால் மருத்துவரிடம் ஓர் ஆலோசனை பெறுவது நல்லது. ஏனெனில் சமயங்களில் மாரடைப்பு கூட இந்த வயிறு எரிச்சல், நெஞ்செரிச்சல் போன்ற அறிகுறியை காண்பிக்கலாம். குறீப்பாக 40 வயது கடந்தால் இந்த அறிகுறியை அலட்சியம் செய்யாமல் இதய நோய் சிகிச்சை நிபுணரை அணுகி அது இதயம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் இல்லையெனில் மருத்துவரை சந்தித்து ஓர் ஆலோசனை பெறுவது இதை கட்டுப்படுத்த செய்யும்.

வளர்ந்து வரும் பிள்ளைகள் அடிக்கடி நெஞ்செரிச்சல் இருப்பதை சொன்னால் அலட்சியம் செய்யாமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது பாதுகாப்பானது.

​நெஞ்செரிச்சல்.. ஏப்பம்.. போன்ற அறிகுறிகளை அலட்சியம் செய்தால் என்ன ஆகும்?​

இந்த நெஞ்செரிச்சல் அறிகுறிகளை அலட்சியம் செய்யும் போது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் தொடர்பான சிக்கல்கள் வரலாம்.

இது உணவுக்குழாய் மேல் புண் உண்டு செய்யலாம். இரத்தப்போக்கு ஏற்படுத்தலாம்.
அந்த இடத்தில் புண் ஆறும் போது வடுவை உண்டு செய்யலாம்.
உணவுக்குழாய் சுருக்கம் வரலாம்.
சிலருக்கு நாள்பட்ட அழற்சி ஏற்பட்டு ஈஸோபேகஸ் esophagus இறுதியில் கேன்சர் வரலாம்.
அதனால் ஆரம்ப கட்டத்தில் மருத்துவரை அணுகி ஒரு பரிசோதைனை செய்வது நிச்சயம் பாதிப்பை தடுக்க உதவும்.

​நெஞ்செரிச்சல் வந்த உடன் பரிசோதனை அவசியமா?​

எல்லோருக்கும் இது தேவையில்லை. ரிஃப்ளக்ஸ் என்று சொல்லக்கூடிய நிலையில் இருக்கும் போது அறிகுறிகள் தீவிரமாக இருக்கும். சிலருக்கு இரத்த வாந்தி வரை அறிகுறி இருக்கும். உணவு விழுங்குவது மிக கடினமாக இருக்கும். உடல் எடை இழப்பு இருக்கும். இது அல்சராக இருக்கலாம் அல்லது கேன்சராக இருக்கலாம். இவர்களுக்கு மட்டும் மருத்துவ பரிசோதனை, அறிகுறிகள் வரலாறு போன்றவை தேவைப்படும்.

​நெஞ்செரிச்சல், ஏப்பம் இருப்பவர்களுக்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் தேவைப்படும்?​

பொதுவான அறிகுறிகள் இருப்பவர்களுக்கு வாழ்க்கை முறை மற்றும் உணவு முறை மாற்றங்கள் மருந்துகள் மட்டுமே போதுமானதாக இருக்கும். இவையெல்லாம் செய்த பிறகும் மீண்டும் மீண்டும் இந்த பிரச்சனையை சந்தித்தால் இவர்களுக்கு எண்டோஸ்கோபி செய்ய வேண்டியிருக்கும். சிலருக்கு அல்சர் கூட வரலாம். புண் போன்று இருக்கலாம்.

உணவு முறை, வாழ்க்கை முறை, மருந்துகள் என்று நீண்ட காலம் எடுத்த பிறகும் அவர்களுக்கு அறிகுறிகள் அப்படியே இருந்தாலோ அல்லது தீவிரமானாலோ அவர்களுக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும்.

​இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் முழுமையாக குணமாக வாழ்க்கை முறை​

இதற்கு சிகிச்சை என்றால் மூன்று விதை சிகிச்சை சொல்லலாம். மருந்துகள் கூட அடுத்த கட்டம் தான்.

உணவு முறை – ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
உடல் எடை – உடற்பயிற்சி செய்ய வேண்டும். இதனால் உடல் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
மன அழுத்தம் – மன அழுத்தம் இல்லாமல் இருக்க வேண்டும்.
உணவை சிறிது சிறிதாக பிரித்து சாப்பிட வேண்டும்.
ஒரே நேரத்தில் உணவை சாப்பிட கூடாது
பட்டினியாக இருக்க கூடாது
நீண்ட நேரம் வயிற்றை காலியாக விடக்கூடாது
சாப்பிட்ட உடன் தூங்க கூடாது. இது அமிலத்தை மேலெழும்ப செய்துவிடும். சாப்பிட்ட பிறகு 3 மணி நேரம் கழித்தே தூங்க வேண்டும்.
நெஞ்செரிச்சலை தூண்டும் எண்ணெய். ஊறுகாய், மசாலா, காரம், ஜங்க்ஃ புட், கார்பனேட்டட் பானங்கள் தவிர்க்க வேண்டும். நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட வேண்டும்.
உடல் பருமன் அதிகமாக இருப்பவர்கள் எடையை கட்டுக்குள் வைக்க வேண்டும்.
ஆடைகள் இறுக்கமாக இருக்க வேண்டாம். சற்று தளர்வாக இருக்க வேண்டும்.
தூங்கும் போது கழுத்து உயரமாக வைக்கும் படி தலையணை பயன்படுத்த வேண்டும்.

இவையெல்லாம் செய்த பிறகு நெஞ்செரிச்சல் மற்றும் இரைப்பை ரிஃப்ளக்ஸ் தொடர்பான பிரச்சனைகள் சரியாகிவிட்டது என்று நினைத்து மீண்டும் இந்த பழக்கங்களை மாற்றும் போது அவர்களுக்கு நெஞ்செரிச்சல் வரலாம். அதனால் எப்போதும் கட்டுக்குள் வைக்க ஆரோக்கியமான உணவு முறை வாழ்க்கை முறையை பின்பற்றுவது அவசியம். இது இரைப்பை உணவுக்குழாய் ரிஃப்ளக்ஸ் நோய் இருப்பவர்களுக்கான சிகிச்சை மட்டுமல்ல அவை வராமல் தடுக்கவும் இந்த குறிப்புகள் உதவும்.