சிவகங்கை நிதி நிறுவனம் பல கோடி மோசடி! உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு!

சிவகங்கை நிதி நிறுவனம் பல கோடி மோசடி:

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையைச் சேர்ந்த சசிகலா, சேவியர் ஆரோக்கியசாமி, வளர்மதி, சுந்தரவள்ளி, சுப்பிரமணி உள்ளிட்டோர் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தனர்.

அதில், “கடந்த 2020 ஆம் ஆண்டு ராஜா பொன்னுசாமி, பாண்டி சரவணக்குமார், கார்த்திகேஸ்வரி, மகேந்திரன் ஆகியோர் எங்கள் பகுதியில் NEW RISE ALAYAM SMALL FINANCE PVT.LTD எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றைத் தொடங்கினர்.

உயர்நீதிமன்ற கிளை அதிரடி உத்தரவு:

அதில் மக்களை ஆசை காட்டி ஏராளமான திட்டங்களை அறிவித்தனர். அவர்களை நம்பி நாங்களும் 3 கோடி ரூபாய்க்கும் அதிகமாக முதலீடு செய்தோம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாதமும் எங்களது வங்கி கணக்கில் தொகை செலுத்தப்பட்டது.

ஆனால் சில மாதங்களில் தொகை எதுவும் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படாததால், காவல்துறையிடம் புகார் அளித்தோம். பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் சிவகங்கை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும், மதுரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டது.

பணம் பெற்று மோசடி செய்தவர்கள் தமிழகம் முழுவதும் 1000 கோடிக்கும் அதிகமாக மோசடி செய்திருப்பது தெரிய வருகிறது. வழக்குப் பதிவு செய்யப்பட்டு 2 ஆண்டுகளுக்கு மேலாகியும் எங்களிடம் பெற்ற பணத்தை நிறுவனத்தாரிடமிருந்து பெற்று தர இதுவரை முறையான நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

நிறுவனத்தின் பல்வேறு சொத்துக்களை மதுரை பொருளாதார குற்றப்பிரிவு சிறப்பு நீதிமன்றத்தால் பறிமுதல் செய்யப்பட்டு, அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.

ஆகவே NEW RISE ALAYAM SMALL FINANCE PVT.LTD நிதி நிறுவனத்துக்கு சொந்தமான அனைத்து சொத்துக்களையும் அடையாளம் கண்டு, அதனை விற்று முதலீடு செய்தவர்களுக்கு தொகையை திருப்பி வழங்க சிறப்பு குழுவை அமைக்கவும், மனுதாரர்களையும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சிகள் என இணைத்து குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யவும் உத்தரவிட வேண்டும்” எனக் கூறியிருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி முரளி சங்கர், “மனுதாரர்கள் புதிதாக பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறையிடம் மனு அளிக்கவும், அந்த மனுவின் அடிப்படையில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாதிக்கப்பட்ட நபர்களை சாட்சிகளாகவும் அல்லது பாதிக்கப்பட்ட புகார் மனுதாரர்களாக இணைக்க வேண்டும். இந்த நடைமுறையை நான்கு வாரத்திற்குள்ளாக செயல்படுத்த உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.