தமிழக மீனவர்கள் மீது தாக்குதல்… இலங்கை கடற்படை துப்பாக்கிச்சூடு.. படகுகளும் சேதம்!

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் இருந்து சுமார் 500 படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றுள்ளனர். நேற்று இரவு கச்சத்தீவிற்கு தென்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினர் சில படகுகளை சுற்றி வளைத்துக் கொண்டனர். பின்னர் அந்த படகுகளில் ஏறி பைப், கயிறுகள் உள்ளிட்டவற்றை கொண்டு மீனவர்களை தாக்கியுள்ளனர். இதில் பலருக்கும் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

இலங்கை கடற்படை அட்டூழியம்

இதன் தொடர்ச்சியாக இலங்கை கடற்படையின் ரோந்து படகுகள் வந்துள்ளன. அதிலிருந்த அதிகாரிகள் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இதனால் தமிழக மீனவர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். தாங்கள் தமிழக எல்லை பகுதியில் தான் மீன்பிடித்து கொண்டிருக்கிறோம் என்று ஜிபிஎஸ் ஆதாரங்களை காண்பித்தனர். ஆனால் இலங்கை கடற்படை விடுவதாக இல்லை. தொடர்ந்து தாக்கியும், அச்சுறுத்தியும் இருக்கின்றனர்.

ராமேஸ்வரம் மீனவர்கள் வேதனை

இந்த சம்பவத்தில் ராமேஸ்வரம் மீனவர்களின் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் சேதமடைந்துள்ளன. இந்நிலையில் பதற்றம் அதிகரிக்கவே செய்வதறியாது விழித்து கொண்டிருந்த மீனவர்கள், உடனே தங்கள் படகுகளில் இருந்து வலைகளை வெட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி வந்துள்ளனர். ஒவ்வொரு படகிற்கும் சுமார் ஒரு லட்ச ரூபாய் மதிப்பில் சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வாழ்வாதாரம் பாதிப்பு

இந்த சம்பவம் தமிழக மீனவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக வங்கக்கடலில் மீன்பிடிக்க சென்று இலங்கை கடற்படையிடம் சிக்கி கொள்ளும் மீனவர்களின் வாழ்வாதாரம் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகிறது. படகுகளை பறிமுதல் செய்து கொள்கின்றனர். மீன்பிடி உபகரணங்களை சேதப்படுத்தி விடுகின்றனர். கோடிக்கணக்கில் அபராதம் போட்டு மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். மொட்டை அடித்து துன்புறுத்துகின்றனர்.

புதிய அதிபர் ஆட்சியில் முதல் சம்பவம்

இப்படியான சூழலில் பெரும்பாலான மீனவர்கள் வேறு மாநிலங்களுக்கு பிழைப்பு தேடி சென்றுவிட்டனர். எஞ்சியிருக்கும் சில மீனவர்கள் தான் மீன்பிடி தொழிலுக்கு சென்று வருகின்றனர். அதுவும் வாரத்திற்கு இரண்டு முறை மட்டுமே மீன்பிடித்து வருகிறோம். இதேநிலை நீடித்தால் அப்பகுதியில் மீன்பிடி தொழிலே அழிந்து விடும் என்று மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இலங்கை அதிபராக அனுரகுமார திஸாநாயக்க பதவியேற்ற பின்னர் முதல்முறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.