பாட முடியாமல் திணறிய டி.எம்.எஸ்; 16 மணி நேரம் பதிவான ஒற்றை பாடல்!

தமிழ் சினிமாவில் தனது குரலின் மூலம் எம்.ஜி.ஆர் சிவாஜி உள்ளிட்ட நடிகர்கள் அவர்களே திரையில் பாடுவது போன்ற தோற்றத்தை உருவாக்கிய டி.எம்.சௌந்திரராஜன் வெண்கல குரலுக்கு சொந்தக்காரர் என்றாலும் கூட அவரே ஒரு பாடலை கஷ்டப்பட்டு பாடி இருக்கிறார். இந்த பாடல் பதிவின்போது எம்.எஸ்.வி அவரை கஷ்டப்பட்டு பாட வைத்திருக்கிறார் என்று சொல்ல்லாம்.

புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் ஏ.வி.எம் நிறுவனம் 1964-ம் ஆண்டு புதிதாக ஒரு முயற்சி எடுத்தது. காமெடி நடிகராக இருந்த நாகேஷை நாயகனாகவும், அப்போது நாயகனாக இருந்த முத்துராமனை துணை நடிகராகவும் வைத்து சர்வர் சுந்தரம் என்ற படத்தை தொடங்கியது. கிருஷ்ணன் பஞ்சு இயக்கிய இந்த படத்திற்கு எம்.எஸ்.விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.

மேலும் இந்த படத்தில் சினிமா ஷூட்டிங் எப்படி நடக்கும், சினிமாவில் பாடல் ரெக்கார்டிங் உள்ளிட்ட பல வேலைகள் எப்படி நடக்கும் என்பதை அப்படியே காட்டியிருப்பார்கள். இந்த படத்தில் இடம் பெற்ற அனைத்து பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. குறிப்பாக வாலி எழுதிய அவளுக்கென்ன அழகிய முகம் என்ற பாடல் இன்றும் ஒரு சிறப்பான வரவேற்பை பெற்று வரும் ஒரு பாடலான நிலைத்திருக்கிறது.

இந்த படத்தில் ஒரு சினிமா எப்படி எடுக்கிறார்கள் என்ற அனைத்து பணிகளையும் காட்டியிருந்த நிலையில், பாடல் எழுதுவது பாடல் பதிவு செய்வது எப்படி என்பதையும் காட்டிவிடலாம் என்று முடிவு செய்து, அவளுக்கென அழகிய முகம் என்ற பாடலை சினிமா பாடல்கள் பதிவு செய்வது எப்படி என்று காட்டியிருப்பார்கள். இந்த பாடலை கவிஞர் வாலி, எழுத, எம்.எஸ்.வி, ராமமூர்த்தி இருவரும் இசையமைக்க, டி.எம்.சௌந்திரராஜன் பாடலை பாடியிருந்தார்.

இந்த பாடல் பதிவின்போது, முதலில் ஏ.எல்.ராவனை வைத்து பாட வைக்க முயற்சித்துள்ளனர். ஆனால் அவர் கிடைக்காத நிலையில், எம்.எஸ்.வி டி.எம்.சௌந்திரராஜன் பாட வைத்துள்ளார். ஆனால் காலை 6 மணிக்கு தொடங்கிய பாடல் பதிவு இரவு 10 மணிக்கு முடிந்துள்ளது. இப்போது பாடல் இருக்கும் ஸ்டைலில் பாடுவதற்கு டி.எம்.எஸ். ரொம்பவே சிரமப்பட்டுள்ளார். பல இசை கலைஞர்கள் ஒன்றாக இசையமைக்க வேண்டும், எல்.ஆர்.ஈஸ்வரி இவருடன் இணைந்து பாட வேண்டும் என்று பல கட்டங்கள் இருந்தாலும், அனைவரும் ஒன்றாக டியூனுக்கு வரும்போது டி.எம்.எஸ். மறந்து ட்ராக் மாறி பாடியுள்ளார்.

அதன்பிறகு எம்.எஸ்.வி அவருக்கு சரியாக பாட சொல்லிக்கொடுத்து அந்த பாடலை பதிவு செய்யும்போது இரவு 10 மணி ஆகியுள்ளது. பாடலை பாடிவிட்டு வெளியில் வந்த டி.எம்.எஸ். இந்த பாடல் யாருக்காக என்று கேட்க, நாகேஷ்க்கு என்று கூறியுள்ளனர். இதை கேட்ட டி.எம்.எஸ். ஒரு காமெடியனுக்கு இந்த பாடல் சரியாக வராது என்று கூறியுள்ளார். ஆனால் அவரது கணிப்பு பொய்யாகி இந்த பாடல் இன்றுவரை பலர் ரசித்து பாடும் ஒரு பாடலாக நிலைத்திருக்கிறது.