முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு துப்பாக்கிகளை மீளப்பெற நடவடிக்கை

முன்னாள் எம்.பிகளுக்கு வழங்கப்படும் பாதுகாப்பு துப்பாக்கிகளை உடனடியாக பாதுகாப்பு அமைச்சிடம் ஒப்படைக்குமாறு அறிவிக்கப்படுள்ளது.

முன்னாள் எம்.பிகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் சேவைகள் பிரிவினால் இது குறித்து அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான கடிதங்களை உரிய முன்னாள் எம்.பிகளுக்கு உடனடியாக அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பாராளுமன்ற சேவைகள் பிரிவின் பேச்சாளர் அத தெரணவிடம் தெரிவித்தார்.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதன் மூலம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு வந்த அனைத்து வசதிகளும் இழக்கப்படும்.

இதன்படி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவு, பணிக்குழாமினருக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள், எரிபொருள் வசதிகள் மற்றும் முத்திரை கட்டணம் என்பன இழக்கப்படும்.

ஆனால், மாதிவெல பாராளுமன்ற உறுப்பினர்கள் குடியிருப்பு வளாகத்தில் வழங்கப்பட்டிருந்த குடியிருப்புகளை மட்டும் தேர்தல் நடைபெறும் நாள் வரை பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், பொதுத்தேர்தலில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்படாத அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் தேர்தல் முடிந்த மறுநாள் மீண்டும் தங்கள் குடியிருப்புகளை ஒப்படைக்க வேண்டும்.

The post முன்னாள் எம்.பிக்களின் பாதுகாப்பு துப்பாக்கிகளை மீளப்பெற நடவடிக்கை appeared first on Tamilwin news.