யாழ் கல்வியங்காட்டில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி – விசாரணை அறிக்கையில் திடுக்கிடும் தகவல்கள்

யாழ் கல்வியங்காட்டில் கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி சிறுமி தர்மிகா தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது என்று உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.

உடற்கூற்றுப் பரிசோதனையில் சிறுமி தற்கொலை செய்துகொண்டுள்ளார் என்று கூறப்பட்டது.

சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடலை எரிக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை செய்ய வடக்கு ஆளுநரால் விசாரணைக்குழு அமைக்கப்பட்டது.

யாழ் கல்வியங்காட்டில் வீட்டுப் பணிப் பெண்ணாக வேலைக்கு அமர்த்தப்பட்ட 16 வயதுச் சிறுமி ஒருவர் சடலமாக மீட்கப்பட்டிருந்த நிலையில், சிறுமியின் மரணத்தின் பின்னரான நடவடிக்கைகள் உரியவகையில் இடம்பெறவில்லை என்று விசாரணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

யாழ் கல்வியங்காட்டில்

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளியாகும் பிராந்தியப் பத்திரிகை ஒன்று இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளது.

யாழ் கல்வியங்காட்டில் உள்ள வீடொன்றில் பணிப்பெண்ணாகச் சேர்க்கப்பட்டிருந்த வட்டுக்கோட்டை, முதலிகோயிலடியைச் சேர்ந்த 16 வயதான கேதீஸ்வரன் தர்மிகா என்ற சிறுமி கடந்த ஜூலை மாதம் 23ஆம் திகதி தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தார்.

சிறுமி சடலமாக மீட்கப்பட்ட வீட்டுக்குச் சென்று இறப்பு விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டார். சிறுமி சடலமாக மீட்கப்பட்டதை அறிந்த சிறுமியின் உறவினர்கள் அந்த வீட்டின் முன்பாகத் திரண்டிருந்ததுடன், சிறுமியின் மரணம் தொடர்பாக சந்தேகங்களையும் எழுப்பியிருந்தனர்.

இறப்பு விசாரணை அதிகாரியின் விசாரணைகளின்போதும் சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் சிறுமியின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாகவே தெரிவித்தனர்.

பேசப்பட்ட சம்பளம் சிறுமிக்கு வழங்கப்படவில்லை, சிறுமி தனது பெற்றோருடன் உரையாடுவதற்கு மாதம் ஒருமுறையே சந்தர்ப்பம் வழங்கப்பட்டது, தனது வீட்டினருடன் உரையாடும்போது சிறுமி வீட்டுக்கு வரப்போகின்றேன் என்று பல தடவைகள் கூறியிருந்தார் என்று இறப்பு விசாரணைகளின்போது உறவினர்கள் தெரிவித்திருந்தனா்.

யாழ் கல்வியங்காட்டில்

அங்கு பெற்றோரும், உறவினர்களும் தெரிவித்தவற்றை அடிப்படையாகக் கொண்டு சிறுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் ஆரம்பத்தில் எழுந்திருந்தது.

சிறுமியின் உடல் யாழ்ப்பாணம் போதனா மருத்துவனைக்குக் கொண்டு செல்லப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சிறுமி கொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் இல்லை என்றும், தானே உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார் என்றும் பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

அதேவேளை, சிறுமியின் மாதிரிகள் மேலதிக பரிசோதனைக்காக கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

சிறுமியின் உடல் பெற்றோரிடம் வழங்கப்பட்டதுடன், எரியூட்டவும் அனுமதி வழங்கப்பட்டது.

சட்ட மருத்துவ அதிகாரியால் தனக்கு வழங்கப்பட்ட அறிக்கையில் சிறுமியின் மரணம் தொடர்பில் சந்தேகம் தெரிவிக்கப்படாததாலும், இறப்பு விசாரணைகளின் அடிப்படையிலும் உடல் எரியூட்ட அனுமதி வழங்கப்பட்டது என்று இறப்பு விசாரணை அதிகாரி தெரிவித்திருந்தார்.

சம்பவம் நடந்து சுமார் ஒரு வாரத்தின் பின்னர் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாணம் உதவிப்பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் வாக்குமூலம் வழங்கினர். சிறுமியின் மரணச் சடங்கு காரணமாகவே இந்தத் தாமதம் ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தில் சிறுமியின் பெற்றோர் இறப்பு விசாரணையின்போது தெரிவித்தவற்றுக்கு நேரெதிராக வாக்குமூலம் இருந்தது என்று பொலிஸ் தரப்புக்களில் இருந்து அறியமுடிகின்றது.

யாழ் கல்வியங்காட்டில்

அதேநேரம், சிறுமியின் மரணத்தில் சந்தேகம் இருக்கின்றது என்று வெளியான தகவல்களை அடுத்து வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இந்த விடயம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐவர் அடங்கிய விசாரணைக் குழு ஒன்றை நியமித்திருந்தார்.

இந்தக் குழு இந்த விடயம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில், அந்த விசாரணைகள் தற்போது முடிவடைந்து அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றும், ஆளுநரின் நடவடிக்கைக்காக அனுப்பப்படவுள்ளது என்றும் அறியமுடிகின்றது.

இந்த விசாரணை அறிக்கையில் சிறுமியின் மரணத்தின் பின்னரான நடவடிக்கைகள் தொடர்பாக பல விடயங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. நடைமுறைகள் சரியான முறையில் பின்பற்றப்படவில்லை என்றும் சில இடங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதில் பிரதானமாக, சட்ட மருத்துவ அதிகாரியின் உடற்கூற்றுப் பரிசோதனை அறிக்கையின்படி “இறப்புக்கான காரணம் இன்னமும் புலனாய்வில் உள்ளது” என்று குறிப்பிப்பட்டுள்ளது. ஆனால் திடீர் இறப்பு விசாரணை அதிகாரி கூறியதாக சிறுமியின் உடல் கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி தகனம் செய்யப்பட்டுள்ளது.

இது சட்டப் பொறிமுறைகளின் மீது வலிந்த சந்தேகங்களை ஏற்படுத்தக் கூடியது என்று விசாரணைக் குழு சுட்டிக்காட்டியுள்ளது. இதை விசாரிப்பது எதிர்காலத்தில் இவ்வாறான மீள் நிகழ்தலைத் தடுக்கும் என்றும் அந்த விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மரணம் தற்கொலை எனத் தீர்மானிக்கப்படின் மத்திய சுகாதார அமைச்சின் FHB/CMM/CS/2022 ஆம் இலக்க 11.08.2023ஆம் திகதியக் கடிதத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட “நடந்தேறிய குழந்தைத் தற்கொலைகள் பற்றிய கள ஆய்வு முறைமை”யை சிறுமி தர்மிகா விடயத்திலும் பின்பற்றி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஊடாக அறிக்கை பெறப்பட்டு தொடர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் விசாரணை அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

16 வயதுச் சிறுமி தங்கி நின்று வேலை செய்தல் தொழில் சட்டத்துக்கு முரணானதாகும். இந்த விடயத்தில் தொழில் திணைக்களமே அதற்கான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொழும்புக்கு அனுப்பப்பட்ட மாதிரிகளின் அறிக்கைகள் கிடைத்த பின்னர், இது ஒரு தற்கொலை எனச் சட்ட மருத்துவ அதிகாரி தீர்மானிக்கும் பட்சத்தில் சிறுமியைத் தற்கொலை செய்யத் தூண்டிய காரணிகள் இருந்துள்ளன என்பது தெளிவாகின்றது.

அந்தக் காரணிகளை வீட்டு உரிமையாளர்களே அறிந்திருக்க வாய்ப்புள்ளது. இறுதி இரு மாதங்களாக சிறுமி தனது குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கவில்லை என்றும் விசாரணை அறிக்கை கூறுகின்றது.

இது தொடர்பாக விசாரணைக்குழுவில் அங்கம் வகித்த ஒரு தரப்பிடம் கேட்டபோது, விசாரணை அறிக்கை முழுமை செய்யப்பட்டுள்ள நிலையில், ஓரிரு தினங்களுக்குள் வடக்கு ஆளுநரிடம் அது சேர்ப்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

விசாரணை அறிக்கை கிடைத்த பின்னர் மேலதிக நடவடிக்கை தொடர்பாகத் தீர்மானம் எடுக்கப்படும் என்று ஆளுநர் அலுவலகத் தரப்புகள் தெரிவித்தன.

இதேவேளை, குறித்த சம்பவம் தொடர்பாக உண்மையான தகவல்கள் ஆராயப்படல் வேண்டும் என முகநூலில் கருத்து வெளியிட்ட நபர் ஒருவரை நீதிமன்றில் முன்னிலையாக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சமூக ஆர்வலரும் ஊடகவியலாளருமான பொன்ராசா அவர்களின் பேஸ்புக் பதிவினை அப்படியே இங்கு தந்துள்ளோம்.

சிறுமியின் சம்பளம் பணத்தை வீட்டு உரிமையாளர்களிடம் பெற்று பெண்ணின் தாயாரிடம் ஒப்படைத்த காரணம் என்ன?

நீதிமன்றம் செய்யவேண்டிய பணியை அவர் ஏன் செய்தார்? அவருக்கு அந்த அதிகாரததை வழங்கியது யார்?

சிறுமியின் மரணத்தில் மர்மம் இருந்த நிலையிலும் சடலத்தை எரிக்குமாறு உத்தரவிட்டது யார்?

தயவுசெய்து இந்த விடயங்களை வெளிக்கொண்டு வாருங்கள்.
நானும் ஒரு ஊடகவியலாளன்தான்.. ஆனால் தற்போது களத்தில் இல்லை… களத்தில் நின்றபோது எப்படிப் பணியாற்றினோம் என்பதை அறிந்தவர் சிலருளர்.

களத்தில் நின்றால் உங்களிடம் இதை எதிர்பார்க்கவேண்டிய தேவை வந்திருக்காது என நம்புகின்றேன்.

யாழ் கல்வியங்காட்டில் யாழ் கல்வியங்காட்டில் யாழ் கல்வியங்காட்டில் யாழ் கல்வியங்காட்டில்