வவுனியா இளைஞர்கள் இருவர் பலி

யாழ்ப்பாணம் – இளவாலை கடலில் நீராடச் சென்ற மூவரில் இருவர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, சடலங்களாக கரையொதுங்கிய சம்பவம் இன்று (20) இடம்பெற்றுள்ளது.

கடலில் நீராடச் சென்ற மூன்று பேரில் இரண்டு பேர் நீரில் அடித்துச் செல்லப்பட்டு, அதில் ஒருவரின் சடலம் முதலில் கரையொதுங்கியது. தொடர்ந்து, நீரில் அடித்துச்‍செல்லப்பட்ட மற்றையவரை தேடும் பணிகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையில், அவரது சடலமும் பின்னர் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

மூவரில் இருவர் உயிரிழப்பு

வவுனியாவில் கங்கன்குளம், செட்டிக்குளம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தேவகருணதாசா ஜூட் (வயது 37), சிவனேசன் திபிசன் ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

சடலமாக மீட்கப்பட்டவர்களில் ஒருவர், யாழ்ப்பாணம் ஆரியகுளம் பகுதியில் உள்ள விடுதியொன்றுக்கு விருந்தினராக சென்றுள்ளார். அந்த விடுதியின் உரிமையாளர், விடுதியில் பணியாற்றும் இளைஞர், அவ்விருந்தினர் ஆகிய மூன்று பேருமே இன்று மாலை கடலில் நீராடச் சென்றனர்.

நீராடிக்கொண்டிருந்தபோது ஒருவர் நீரில் மூழ்க, அவரை காப்பாற்றுவதற்காக மற்றையவர் முயன்றபோதே இருவரும் நீரில் அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சென்ற வவுனியா நபர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வவுனியா இளைஞர்கள் இருவர் பலி-oneindia news