வாகனங்கள் தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விளக்கம்

தற்போது ஜனாதிபதி செயலகத்திற்கு அண்மித்த வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருவது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் கவனம் செலுத்தியுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது

குறித்த ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

புதிய ஜனாதிபதியின் நியமனத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டதன் பிரகாரம் ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்ட 107 வாகனங்கள் தற்காலிகமாக பொலிஸ் பாதுகாப்பில் ஜனாதிபதி அலுவலகத்திற்கு வெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி செயலகத்திற்குரிய வழக்கமான ஊழியர்களுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்படாத நிலையில், முன்னாள் ஜனாதிபதியினால் அரசியலமைப்பின் 41 (1)ஆவது சரத்தின் கீழ் நியமிக்கப்பட்ட தனது தனிப்பட்ட ஊழியர்களுக்கு அவை வழங்கப்பட்டள்ளன.

மேலும், ஜனாதிபதி செயலகத்தில் அதிக வாகனங்களை நிறுத்துவதற்கு இடமில்லாத காரணத்தினால் மாத்திரமே இந்த வாகனங்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு வெளியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், இவற்றை இவ்வாறு காட்சிப்படுத்துவது நோக்கம் அல்ல எனவும் ஜனாதிபதி செயலளம் தெரிவிக்கின்றது.

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அண்மையில் வழங்கிய பணிப்புரையின் பிரகாரம், இந்த வாகனங்களை அவசர சேவைகளுக்காக விரைவில் வழங்குவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஜனாதிபதி அலுவலகம் மேலும் தெரிவிக்கின்றது.

மேலும், வெளிப்படைத்தன்மை மற்றும் துல்லியத்தை பாதுகாக்கும் வகையில், இவ்வாறு ஒப்படைக்கப்பட்ட வாகனங்களின் முழுமையான பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.