TNPSC Group 4; குரூப் 4 தேர்வு ரிசல்ட் அக்டோபரில் வெளியாகும்; டி.என்.பி.எஸ்.சி அறிவிப்பு

டி.என்.பி.எஸ்.சி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அமைச்சு பணிகள், வாரியங்கள், வனப் பணி மற்றும் பொதுத் துறை நிறுவனங்களில் காலியாக உள்ள நான்காம் நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான குரூப் 4 தேர்வை ஜூன் 9 ஆம் தேதி நடத்தியது. மொத்தம் 6244 பணியிடங்களுக்கு இந்தத் தேர்வு நடத்தப்பட்டது. இந்தத் தேர்வு மூலம் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், வனக் காவலர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதியுள்ளனர்.

இந்தநிலையில், ஜூன் 19 ஆம் தேதி குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்புகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்ப்பார்த்துக் காத்திருந்தனர்.

இந்தநிலையில், தேர்வர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் செய்தியாக, குரூப் 4 தேர்வு முடிவுகள் வருகின்ற அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என்ற தேர்வாணையம் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக டி.என்.பி.எஸ்.சி எக்ஸ் பக்கத்தில் இன்று (செப்டம்பர் 3) மாலை வெளியிட்டுள்ள பதிவில், “கடந்த ஜூன் 9 ஆம் தேதி நடத்தப்பட்ட குரூப் 4 தேர்வின் முடிவுகள் அக்டோபர் மாதம் வெளியிடப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, குரூப் 4 தேர்வு முடிவு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வெளியிடப்பட்டும் என டி.என்.பி.எஸ்.சி அறிவித்திருந்தது. இந்நிலையில், தேர்வு முடிவுகள் அதற்கு முன்பாகவே வெளியிடப்படுகின்றன.  குருப்-4 தேர்வு முடிவு முன்கூட்டியே 3 மாதங்களுக்கு முன்னரே வெளியிடப்படுவதால் தேர்வெழுதியவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.